Saturday, April 2, 2011

பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் - ரெங்கராஜன் MLA பேட்டி



தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சூடுப்பிடித்திருக்கும் இந்த தருணத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் நம் பட்டுக்கோட்டை தொகுதி முக்கிய வேட்பாளர்களை நேர்காணல் எடுத்து வெளியிட்டால் இணையத்தின் ஊடாக பட்டுக்கோட்டை தொகுதி மக்களுக்கு யார் தகுதியானவர் என்பதை அறிவதற்கு ஓர் வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தோம்.

நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் இன்றைய சட்டமன்ற உறுப்பினருமாகிய ரெங்கராஜன் MLA அவர்களை அவர்களை அதிரைநிருபர் சார்பாக அலைபேசி வாயிலாக கேள்விகள் வைத்து பதிலைப் பெற்றோம் இதோ உங்களின் பார்வைக்கும் ஓட்டு அளிக்கும் உரிமை முடிவுக்கும் !

அதிரைநிருபர்: இதுவரை இரண்டு முறை இதே தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்று இதுநாள் வரை இருக்கிறீர்கள் அதிராம்பட்டினத்திற்கு எவ்வகையான நலத்திட்டங்கள் / நன்மைகள் செய்திருக்கிறீர்கள் பட்டியலிடுங்களேன் !?

M.L.A ரெங்கராஜன்: முதலில் மிகவும் சந்தோஷம் உங்களிடையே பேசுவதில், அதிராம்பட்டினத்தில் பொது மருத்துவமனைக்கு ஏற்கனவே நாற்பது இலட்சம் செலவில் புதியக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. தற்போது மேலும் ஐம்பது இலட்சம் நிதியுதவி பெற்று அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் மூலமாகவும் 17 இடங்களில் சிமிண்ட் சாலைகள், சமுதாயக் கூடங்கள், ரேஷன் கடைகள் அவைகள் அனைத்தையும் அமைத்து முடிக்கப்பட்டிருக்கின்றன, மீனவர்கள் மீன்பிடித்து வருபவர்களின் பகுதிகளில் நீண்ட நாட்களாக விளக்கு வசதியில்லை அங்கே விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

ஆதி திராவிடர்கள் பகுதியிலே சமுதாயக் கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, இஸ்லாமிய பெருமக்கள் வசிக்கும் பெரும்பாலான இடங்களில் சிமிண்ட் சாலைகள் போடப்பட்டிருக்கிறது. புதிய பஸ்டாண்டு அமைவதற்கு முழு முயற்சி எடுத்து வருகிறேன். ஏற்கனவே மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அவர்களால் அங்கே அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது, அதேபோன்று முயற்சிகளாக அதிராம்பட்டினம் பேரூராட்சியின் ஒத்துழைப்புடன் நலத்திட்டங்கள் செய்யப்பட்டிருக்கிறது, இனி வருங்காலத்திலும் நல்லத்திட்டங்களை செயல்படுத்துவதில் முழு ஒத்துழைப்பாக இருப்பேன்.

அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்து பெரும்பாலான மக்களின் அவசிய கோரிக்கைகள் உங்களுக்குத் தெரியுமா அல்லது உங்களின் கவனத்திற்கு வந்திருக்கிறதா ?

M.L.A ரெங்கராஜன்: அதிராம்பட்டினத்தில் எங்கே பார்த்தாலும் வடிகால் (drynage) வசதிகள் செய்துதரும்படி எங்கே பார்த்தாலும் கேட்கிறாங்க மீண்டும் வெற்றிப் பெற்று வந்தால் அதிராம்பட்டினம் பகுதியிலும் முழுமையாக வடிகால் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எல்லா வகையான என்னால் ஆன நடவடிக்கைகளை எடுக்க கண்டிப்பாக முயற்சிசெய்வேன்.

அதிரைநிருபர்: கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை அதிராம்பட்டினம் வந்திருக்கிறீர்கள் ? எதற்காக என்றும் சொல்லமுடியுமா ?

M.L.A ரெங்கராஜன்: அதிராம்பட்டினத்தைப் பொறுத்தவரையிலே மக்கள் அழைத்தார்கள் நான் வரத் தவறியது கிடையாது. அதுவே அல்லாமல் ஊரிலிருக்கும் நாட்களில் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது நான் அதிராம்பட்டினத்திற்கு சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்திருக்கேன். அங்கே நடக்கக் கூடிய சுக துக்கங்களில் கலந்து கொண்டு வந்திருக்கேன்.

அதிரைநிருபர்: எங்களூர் பேருந்து நிலையம் ஏன் இதுவரை புதிதாக்கப்படவில்லை ? யாரும் உங்களிடம் இதைப்பற்றி கேட்கவில்லையா ?

M.L.A ரெங்கராஜன்: பேருந்து நிலையத்திற்கு கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்தாயிரம் இலட்சம் பணம் தேவைப் படுகிறது அதை நாங்கள் முழு முயற்சி எடுத்து மரியாதைக்குரிய முன்னாள் பேரூராட்சிமன்ற தலைவர் மறைந்த திரு எம்.எம்.எஸ் அவர்களோடு நானும் சென்னைக்கு சென்று பல்வேறு முயற்சிகள் எடுத்து அதன் பின்பு பேரூராட்சி பொது நிதியிலிருந்து கட்டுவது என்று அவர் ஒரு முடிவு எடுத்து அதைத் தொடர்ந்து மக்களும் நல்ல பஸ்டாண்டு தேவை என்றும் கேட்டார்கள் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. நிச்சயமாக இந்தப் பணியை முழுவதுமாக நான் முடித்து வைப்பேன், இன்னும் சொல்லப் போனால் மீண்டும் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் இருபத்தி ஐந்து இலட்சம் வரை அதற்காக ஒதுக்கீடு செய்து கொடுத்து பேருந்து நிலையம் புதுப்பிக்கபடும் என்று இந்தருணத்தில் வாக்குறுதியளிக்கிறேன்.

அதிரைநிருபர்: மத்தியிலிருக்கும் காங்கிரஸ் ஆட்சி அதனைக் கொண்டு எங்களது ஊருக்கு என்ன நனமைகள் செய்திருக்கிறீர்கள் இதுவரை ?

M.L.A ரெங்கராஜன்: மத்திய அரசுடைய திட்டங்கள் என்பது நம்மால் நேரடியாக செய்ய முடியாது மத்திய அரசின் நிதிதான் மாநில அரசு மூலமாக எல்லா இடங்களுக்கும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிராம்பட்டினம் பகுதியிலே பல்வேறு நபர்களுக்கு மத்திய அரசுடைய கல்விக் கடன் பல்வேறு மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். அதேபோன்று வாங்கதவர்களுக்கும் தொடரும்.

அதிரைநிருபர்: அதிராம்பட்டினத்து மக்கள் எல்லோருடைய எதிர்பார்ப்பு அகல இரயில் பாதைத் திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டிலும் ஏதும் சொல்லப்படவில்லையே? யாரேனும் உங்களிடம் எங்கள் ஊருக்கு அகல இரயில் பாதை என்ன ஆச்சுன்னு கேட்டிருக்காங்களா ? ஏன் இன்னும் தடைபட்டு இருக்கிறது !?

M.L.A ரெங்கராஜன்: முதல்ல வந்த காரைக்குடியிலேயிருந்து அதிராம்பட்டினம் திருத்திறைப்பூண்டி வழியாக சென்ற மனோரா எக்ஸ்பிரஸ் போனது பார்த்தீங்களா ! முதல்ல அந்தப்பாதையை அகலப் படுத்திகிட்டு இருக்காங்க. அதற்கான நிதியுதவி செய்யப்பட்டிருக்கிறது அதற்கான முயற்சிகள் எடுத்து அங்கிருக்கக் கூடிய பாதையாகி இரயிலை விட்டோம்னு சொன்னாலே நம்முடைய பெரும்பாலான நம்முடைய நெருக்கடி தீர்ந்திடும் அதற்கான முயற்சியை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் அதற்காக நம்முடைய பாராளுமன்றத் தொகுதி உறுப்பினரும் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும் திரு பழனிமாணிக்கம் அவர்களும் அதற்கான முயற்சியை நல்ல முறையில் செய்து கொண்டிருக்கின்றார் வருங்காலங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் அவர்களை சந்தித்து இன்னும் ஓர் ஆண்டுக்குள் நிறைவேற முழுமையாக நான் மற்றும் கூட்டனி கட்சிகளுடன் சேர்ந்து பாடுபடுவோம்.

அதிரைநிருபர்: இந்தத் தேர்தலில் பட்டுக்கோட்டைத் தொகுதியில் உங்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் எந்த அளவுக்கு உள்ளது ?

M.L.A ரெங்கராஜன்: நல்ல முறையில் செய்திகிட்டு இருக்காங்க கூட்டணிக் கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன் வெற்றிக்காக பாடுபடுகிறார்கள்.

அதிரைநிருபர்: எங்களது ஊர் பழம்பெரும் தலைவர் மறைந்த எம்.எம்.எஸ். அப்துல் வஹாப் அவர்களின் இழப்பு காங்கிரஸ் கட்சியினுடைய ஓட்டு குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஒரு கருத்து நிழவுகிறதே ! இச்சூழல் பற்றி என்ன நினைக்கிறீங்க !?

M.L.A ரெங்கராஜன்: மறைந்த எம்.எம்.எஸ் மறைவு என்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு ஆனால் எம்.எம்.எஸ். குடும்பத்திலுள்ளவர்கள் கிட்டத்தட்ட நூறு பேர்கள் ஒவ்வொருவரும் எம்.எம்.எஸ் அவர்களாக உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அதிரைநிருபர்: பேருந்து நிலையம் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது அதனைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் அங்கே என்னதான் பிரச்சினைகளைச் சொல்லுங்களேன் ? தீர்வுதான் என்ன ?

M.L.A ரெங்கராஜன்: நான் முன்னபே அறிந்த விஷயம்தாங்க அதுல வந்து சில சட்டச்சிக்கல்கள் கொஞ்சம் இருக்கிறது இரண்டு தரப்பாரும் பேரூராட்சி நிர்வாகமும் அதனை தீர்த்துக் கொள்வதற்கு தயாராக இருக்கிறார்கள். அதை ஒரு அமைப்பு கையில் எடுத்துச் செய்றாங்க அவங்க சற்று இறங்கி வந்து செய்து கொடுத்தாங்கன்னு சொன்னா பேச்சு வார்த்தை முலமாக நிச்சயமாக தீர்க்கமுடியும். அதை வரக்கூடிய காலங்களில் செய்து முடிப்பதற்கு எவ்வித சட்டச் சிக்கல்கள் இல்லாமல் என்னால் ஆன நடவடிக்கைகள் என்னன்ன எடுக்க முடியுமோ அத்தனை நான் எடுக்க தயாராக இருக்கிறேன். (கிளைக் கேள்வி : இதற்கு ஒரு கால அளவு சொல்ல முடியுமா முக்கியமாக தேர்தல் நேரமாக இருப்பதால் ?), அதாவது பெரியவர் எம்.எம்.எஸ் அவர்கள் தலையிட்டுச் செய்து கொண்டிருந்த காரணத்தினால் அவர்களும் நல்ல முறையில் முடித்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம் ஆனால் அவர்களின் மறைவு காரணமாக தற்போது அம்முயற்சி தடைபட்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றதும் நானே நேரில் தலையிட்டு ஆறுமாத காலத்திற்குள் நிச்சயமாக சுமூகமாக தீர்த்து வைப்பேன்.

அதிரைநிருபர்: பட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிடும் இரண்டு பெறும் கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும் இத்தொகுதி வெற்றிக்கு மிக முக்கியமாக அதிராம்பட்டினத்து முஸ்லீம்களின் வாக்குகளும் ஒரு காரனியக இருக்கும் என்று, கடந்த இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்ற உங்களுக்கும் நன்றாகத் தெரியும். சரி உங்களை வெற்றியடைய செய்த அதிரை வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ள என்ன செய்திருக்கீங்க இனிமேல் என்ன செய்யலாம் என்று எண்ணியுள்ளீர்கள் ?

M.L.A ரெங்கராஜன்: அதாவது எனக்கு அரசியலில் முகவரி அளித்தது அதிராம்பட்டினம்தான் அதற்காக என்னால் முடிந்தவரை நல்ல முறையில் பணியாற்றி வருகிறேன். அதிராம்பட்டினத்தைப் பொருத்தவரை எந்த திட்டங்களிலும் குறைகள் வைக்கவில்லை வருங்காலத்தில் அவர்களின் மிகப் பெரிய பிரச்சினையான வடிகால் பிரச்சினையை தீர்த்து வைப்பதுதான் ரொம்ப முக்கியம். பெரும்பால சாலை வசதிகள் 90%க்கு முடிக்கப்பட்டு விட்டன, ஆனால் வடிகால் பிரச்சினை என்பது அவர்களுக்கு தீராத பிரச்சினையாக இருக்கிறது நிச்சயமாக அது ஒரு மேஜர் ஸ்கீம்னு சொல்லுவேன் மிகப் பெரிய திட்டமாக அதனை எடுத்து நிச்சயமாக செய்து கொடுப்பதும் அதே போன்று பேருந்துநிலையத்தையும் அங்கே ஆரம்பிக்கப்பட பணிகளை தொய்வின்றி முடித்து வைப்பதும் நான் அவர்களுக்கு செய்யக் கூடிய நன்றியாகும்.

அதேபோல் அகல இரயில் திட்டத்தைப் பொருத்தவரையில் என்னுடைய முயற்சி என்பது முழுமையாக இருந்து கொண்டிருக்கும். அதேபோல் அரசு மருத்துவமனையில் சில குறைபாடுகள் இருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள் அங்கே 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்து செய்து கொடுப்பேன். அதாவது 108 அம்புலன்ஸ் கோரிக்கை பற்றியும் கொடுத்திருக்கிரார்கள் அதிராம்பட்டினத்திற்கு தனியாக வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். அதேபோல் தீ அணைப்பு நிலையம் ஒன்று அதிராம்பட்டினத்திற்கு தனியாக வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றார்கள். நிச்சயமாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அங்கு கொண்டு வர முடியும், தீ அணைப்பு நிலையம் அமைவதற்கு நிச்சயமாக என்னால் ஆன முயற்சிகளை எடுப்பேன்.

அதிரைநிருபர்: உங்களுடைய வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது ? வெற்றி பெற்றிடுவோம்னு முழு நம்பிக்கை இருக்கிறதா ?

M.L.A ரெங்கராஜன்: நிச்சயமா ஜனநாயக முற்போக்கு கூட்டணி இன்னைக்கு எனக்காக திராவிட முன்னேற்ற கழகம் உட்பட முஸ்லீம் லிக், தவ்ஹீத் ஜமாத் ஆகிய நண்பர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்ற இயக்க நண்பர்கள் அனைவரும் நல்ல முறையிலே வெற்றிக்காக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இரண்டு முறை வெற்றி பெற்றது போல் இந்த முறையும் மீண்டும் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சி அமையும்.

அதிரைநிருபர்: உங்களுக்கும் எதிரணியில் இருக்கும் வேட்பாளர் திரு செந்தில் குமாருக்கும் இடையே வித்தியாசங்களை நீங்களே சுருக்கமாக சொல்லுங்களேன்.

M.L.A ரெங்கராஜன்: ஐம்பது வருடங்களாக அரசியலில் எங்களது குடும்பம் பட்டுக்கோட்டை தொகுதி மக்களுக்கு நன்கு தெரிந்த குடும்பம், பத்தாண்டுகள் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒருவனாக இருந்து பட்டுக்கோட்டைப் பகுதியில் சாதிரீதியான மதரீதியான மோதல்கள் இல்லாமல் நல்ல முறையிலே இந்தத் தொகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளேன். வருங்காலத்திலும் அது தொடருக்கக் கூடிய வகையிலே என்னுடைய நிலை அப்படியே தொடரும். எதிர்கட்சியில் இருப்பவரைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

ப்பேட்டியை எழுத்து வடிவில்தான் பதிவோம் என்றும் சொல்லிட்டோம். நம் தொகுதிக்கு நல்ல தகுதியானவரை தேர்தேடுத்தாக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை செய்துள்ளோம்.

அன்பார்ந்த அதிரை மக்களே இதே உங்கள் பார்வைக்கு வைத்துவிட்டோம். மற்ற வேட்பாளர்களுடன் இந்த வேட்பாளரை தரம் பார்த்து இனி நீங்கள் முடிவு செய்துக்கொள்ளுங்கள் யாருக்கு ஒட்டளிப்பது என்று.

வேட்பாளருக்கும், ஓட்டுப்போடப்போகும் மக்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

-- அதிரைநிருபர் குழு

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் - ரெங்கராஜன் MLA பேட்டி"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?