Thursday, March 5, 2009

இது பரீட்சைக் காலம்

அமைதியான இரவு நேரத்தில், மழை ஓய்ந்து கூரையிலிருந்து சொட்டு சொட்டாக வடிந்த மழை நீர், உடம்பில் ஓர் இதமான சுகத்தைக் கொடுத்தது. நாளைய பரீட்சைக்காகப் படித்து ஓய்ந்து போன மன்சூருக்கு மனதில் சற்று குளிர்ச்சியைத் தந்தது. இருப்பினும் இன்றைய பரீட்சை சரியாக எழுதவில்லையே என்ற வருத்தம் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. ஆறுதல் சொல்லுவதற்கு அம்மா தற்போது வீட்டில் இல்லை. அக்காளின் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டை சென்றவர்கள் திரும்பி வர இன்னும் இரண்டு நாளாவது ஆகும். சிறிது ஓய்வுக்குப் பிறகு மீண்டும் படிக்க ஆரம்பித்தான் மன்சூர். மணி பத்தைத் தாண்டிவிட்டது. நேற்று இரவும் படுக்க நேரமாகிவிட்டது.கொட்டாவி வர ஆரம்பித்தது. தூங்கப் போகலாம் என்றால் இரண்டாவது பேப்பராவது சரியாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து உறக்கத்தைக் கலைத்தது. "ஏன் தம்பி, நேரத்தோடு தூங்கிட்டு, நேரத்தோடு எழுந்து படி வாப்பா" என்ற, சுவரோரம் கிடந்த, பாட்டியின் முனகலான குரல் ஆறுதலைத் தந்தது. எழுந்து விளக்கை அணைத்து விட்டு படுத்தான். புரண்டு புரண்டு படுத்தான்.. தூக்கம் வந்தபாடில்லை. எத்தனை நேரம் போனது என்றே தெரியவில்லை. அசந்து தூங்கிவிட்டான்.

திடீரென்று உடம்பில் சுருக்கென்று ஓர் வலி. கண்ணைத் திறந்தும் திறக்காமலும் மணியைப் பார்த்தான். 'அட! ஏழு மணியாகி விட்டதே.!'. உடம்பில் பயங்கர அசதி. எழுந்திருக்கப் பார்த்தான். முடியவில்லை. கஷ்டப்பட்டு எழுந்தவன் கால்கள் பின்ன தடுமாறினான். ஒரு வழியாக நிமிர்ந்து மணியைப் பார்க்கும்போது, ஏழே கால் ஆகியிருந்தது. 'என்ன செய்வது? ஒரு மணி நேரத்துக்குள் பள்ளியில் இருக்க வேண்டும்'. முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு டிரெஸ்ஸைத் தேடினான். எல்லாம் கசங்கிக் கிடந்தது. 'வேறு வழியில்லை. போட்டுக்கொண்டு ஓடிப் போய்ச் சேர வேண்டும்' என்று காலை எடுத்தால் மீண்டும் பின்னுகிறது. தட்டுத் தடுமாறிப் போய்ச் சேர்ந்தால், தேர்வு தொடங்கி விட்டிருந்தது. சூப்பர்வைஸரிடம் திட்டை வாங்கிக் கட்டிக் கொண்டு கேள்வித் தாளைப் படிக்க ஆரம்பித்தான். கண்களில் நீர் வந்து மறைத்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பார்த்தான். லேசாக மங்கலாகத் தெரிந்தது. எல்லாம் படித்தவைதான். ஆனால் ஒன்றும் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. எழுத ஆரம்பித்தான். கை தடுமாறியது. எழுதுகிறான். எழுதுகிறான். ஆனால் வினாத்தாள் தீர்ந்தபாடில்லை. பக்கம் பக்கமாக ஏதும் புரியாமல் எழுதிக் கொண்டே இருக்கிறான்.

மீண்டும் சுருக்கென்று ஒரு வலி. அதே சமயத்தில் யாரோ மயிலிறகால் மெல்ல வருடுவது போன்ற ஓர் உணர்வு மெல்லிய முனகலுடன். சிறிது நேரம் ஓய்ந்திருந்தது. சற்று நேரத்தில் பரீட்சைக்கான நேரம் முடிந்ததற்கான மணி ஒலித்தது. ஒலித்துக் கொண்டே இருந்தது. மீண்டும் அதே மெல்லிய வருடல். 'தம்பி, மணி அடிச்சுக்கிட்டே இருக்கு. பாங்கும் சொல்லுராக. எழுந்திரு வாப்பா' என்று மெல்லிய குரல் கேட்டது. பட்டென்று பதறிக் கொண்டு எழுந்தான். 'அட. நாம் தூங்கிக் கொண்டிருந்திக்கிறோமா? அத்தனையும் கனவுதானா. அப்பொழுது தான் பாட்டி தன் அருகில் இருந்து தன் வயதான கரங்களால் தடவியதும், அலாரம் அடித்து ஓய்ந்ததும் கவனித்தான். அப்பொழுது தொலைவிலிருந்த பள்ளியிலிருந்து இனிமையான குரலில் பாங்கு, காற்றில் மெல்ல தவழ்ந்து வந்தது. தன் காதோரம் கடித்து தூக்கத்தை கலைத்த, நன்றி சொல்ல வேண்டிய எறும்பை கசக்கி எறிந்து விட்டு, வாழ்த்த வயதில்லாத அவன் தன் பாட்டியை வாழ்த்திவிட்டு, அத்தனையும் கனவாகிப் போனதே என்று தன் நன்றியை இறைவனுக்கு நிறைவேற்ற பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

நன்றி
Azeesudeen


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இது பரீட்சைக் காலம்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?