Sunday, December 21, 2008

அறிவு வளர அயோடின் வேணும்

தடுப்பு மருந்துகள் மூலம் தொற்றுநோய்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தேவையான சத்துக்களை நம் உணவில் உரிய அளவில் சேர்த்துக்கொள்ளாததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று அயோடின் சத்து. அயோடின் சத்தை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அயோடின் சத்துக்கும் தைராய்டு சுரப்பிக்கும் என்ன தொடர்பு?

தைராய்டுசுரப்பி

நம் கழுத்துப் பகுதியில் நார்த் தசைகளுக்கு அடியில் தைராய்டு சுரப்பி உள்ளது. இச் சுரப்பி தைராக்சின் என்ற ஹார்மோனைச் சுரக்க அயோடின் சத்துத் தேவைப்படுகிறது. அயோடின் சத்து குறைந்தால் தைராக்சின் ஹார்மோன் சுரப்பு இருக்காது. இதனால் உடல் வளர்ச்சி தடைபடுகிறது. குழந்தை குள்ளமாக இருப்பதோடு அறிவுத் திறனும் குறைந்துவிடுகிறது. மேலும் மாறு கண், காது கேளாமை, மந்தமான போக்கு ஆகியவை காணப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் "க்ரெடின் குழந்தைகள்' என்று அழைக்கப்படுகின்றன.

அயோடின் சத்து பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. அயோடின் சத்தை உள்ளடக்கிய மண்ணில் வளரும் தாவரங்கள், அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகியவற்றிலிருந்து மனிதனுக்கு அயோடின் சத்து கிடைக்கிறது.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது, கால இடைவெளி இல்லாமல் திரும்பத் திரும்பப் பயிரிடுவதால் மண் வளம் குன்றிப் போதல் போன்ற காரணங்களால் இயற்கையில் இருந்து அயோடின் சத்து முழுமையாகக் கிடைப்பது இல்லை.

அயோடின் சத்துக் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை வரும் என்பது பரவலாகச் சொல்லப்படும் விஷயம். ஆனால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இன்னும் பலர் உணரவில்லை. அயோடின் சத்துக் குறைவால் புத்திக் கூர்மை இல்லாமல் மந்தப் போக்கு ஏற்படும். வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி இருக்காது. பெண்களுக்கு பூப்பெய்வது, கருத்தரிப்பது தள்ளிப்போதல், மாதவிலக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது பலர் அறியாத விஷயம்.

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக் கலைதல், குறைப் பிரசவம், எடை குறைந்த குழந்தை பிறத்தல், சிசு இறப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

அயோடின் பற்றாக்குறையை ஈடுகட்ட உணவில் நாள்தோறும் அயோடின் கலந்த தரமான உப்பைச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

நமது உடலுக்கு மைக்ரோ அளவிலேயே அயோடின் தேவைப்படுகிறது. தினமும் ஒரு தீக்குச்சி தலையளவு அயோடின் கிடைத்தால் போதுமானது. ஒரே முறையில் அயோடினைத் தூக்கி விழுங்கிவிடுவதால் நன்மை கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதனால் அயோடின் சத்து சமையல் உப்பில் கலந்து தரப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலையில் அயோடின் உப்பு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டில் வளர்க்கும் அனைத்து கால்நடைகளுக்கும் அயோடின் உப்பு கலந்த தீவனம் தருவதால் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி அதிகரிப்பதோடு நோய்ப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.

தமிழகத்தில் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவு. உப்பு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி வகிக்கிறது. ஆனால் அயோடின் உப்பைப் பயன்படுத்துவோர் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. எனவே அயோடின் உப்பைப் பயன்படுத்துவது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அறிவு வளர அயோடின் வேணும்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?