Thursday, February 5, 2009

பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்கள் !



என்னதான் படித்துக் கல்வி அறிவு பெற்று விட்டாலும், சமூகத்திலும் வேலை வாய்ப்புகளிலும் ஓரளவிற்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகளைப் பெற்று விட்டாலும் இன்னமும் கூட ஆண்களை நம்பித் தங்களைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் பெண்களைத் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

திருப்பூரில் பிறந்து வளர்ந்த 23 வயதான பிரியதர்சினி என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்கள்.

பிறந்ததில் இருந்தே தைரியசாலியாக இருந்த இந்தப் பெண் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தார். அதற்காகத் திருப்பூரில் உள்ள தனது குடும்பத்தைப் பிரிந்து சென்னையில் சென்று வேலை பார்க்கும் அளவுக்குத் தைரியம் உள்ளவராகத்தான் இருந்து உள்ளார்.

சென்னையில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி ஒரு இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். வாரம் ஒருமுறை தனது சொந்த ஊரான திருப்பூருக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். அப்படி ரயிலில் செல்லும் போது ஒருமுறை எதிர் இருக்கையில் பயணம் செய்த ஈரோட்டைச் சேர்ந்த ஒரு இளைஞரைச் சந்தித்து உள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட உடனேயே இருவருக்கிடையேயும் காதல் கனிந்து விட்டது. பார்த்த உடன் பற்றிக் கொண்ட காதலுக்கு பிரியதர்சினியின் தைரியமான சுபாவம் ஊக்கம் தரக் காதல் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது,

பிரியதர்சினி வீட்டை விட்டு வெளியில் தங்கி இருந்தது இந்தக் காதல் பறவைகளுக்கு வசதியாகப் போய் விட்டது. சென்னையில் உள்ள திரையரங்கம், பூங்காக்கள், கடற்கரை என்று சிறகு விரித்துப் பரந்த இந்தக் காதல் பறவைகளுக்கு நாளடைவில் சிற்றின்பம் அலுத்து விடப் பேரின்பம் தேட முனைந்து உள்ளனர்.

கேள்வி கேட்கக் குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லாத நிலையில் அடிக்கடி வெளியூர் சென்று அங்குள்ள விடுதிகளில் இருவரும் தனியாகத் தங்கித் தங்கள் காதலை ? வளர்க்க ஆரம்பித்து உள்ளனர்.

பலமுறை இது போன்று வெளியூர் விடுதிகளில் தங்கி வரம்பு மீறி உல்லாசம் அனுபவிக்க ஆரம்பித்து உள்ளனர் இந்தப் காதல் ஜோடிகள். காதலன் விரும்பிய போதெல்லாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் தன்னையே அவனுக்கு விருந்தாக்கித் தனது காதலனை இன்பத்தில் திளைக்க வைத்துத் தானும் இன்புற்று வந்திருக்கிறார் இந்தப் பெண்.

திருமணத்திற்கு முன்பே தான் விரும்பிய போதெல்லாம் தன்னுடைய காம இச்சைகளைத் தீர்த்து வைத்துத் தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்த பிரியதர்சினியைப் பற்றி அவரது காதலனுக்கு திடீரென சந்தேகம் வந்து உள்ளது.

திருமணத்திற்கு முன்னர் சிலநாட்கள் மட்டுமே பழகிய தன்னுடன், பலமுறை தகாத உறவு வைத்துக் கொள்ளச் சிறிதும் தயங்காத இந்தப் பிரியதர்சினி எப்படி ஒரு நல்ல குடும்பப் பெண்ணாக இருக்க முடியும் என்று எண்ணி உள்ளார் அந்த யோக்கியமான காதலன்.

அந்தப் பெண்ணைத் தன் விருப்பம் போல அனுபவித்து முடித்து, அந்தப் பெண்ணின் மீது தனக்கு இருந்த எல்லாவிதமான இச்சைகளையும் தீர்த்துக் கொண்ட பின்னர்தான் இந்தப் புனிதக் காதலனுக்கு இப்படிப்பட்ட ஒரு ஞானோதயம் தோன்றி அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் வந்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

அந்தக் காதலன் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அந்தப் பெண்ணுடனான உறவைத் துண்டிக்க முயன்றுள்ளார். அந்தப் பெண்ணை சந்திப்பதைத் தவிர்த்த அவர், தனது அலைபேசி எண்ணையும் மாற்றி விட்டிருக்கிறார்.

இன்பம் வேண்டும் என்ற போதெல்லாம் தன்னிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு, பின்னர் கருப்புச் சக்கையைப் போலத் தன்னைத் தூக்கி எறிய, தனது காதலன் முடிவு செய்து விட்டதை அறிந்த அந்தப் பெண் அதிர்ந்துள்ளார்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை அந்த இளைஞனைக் கெஞ்சிக் கூத்தாடி உள்ளார்.ஆனாலும் அதற்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை. அந்த இளைஞனின் மனது சிறிதும் மாறவில்லை. பிரியதர்சினியைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று முற்றாக மறுத்து விட்டிருக்கிறான் அந்த இளைஞன்.

பிரியதர்சினி தைரியசாலி அல்லவா, உடனே காவலர்களிடம் புகார் கொடுத்து தனக்கு நியாயம் பெற்றுத் தரும் படி முறையிட்டு உள்ளார். காவலர்களின் விசாரணையின் போதும் பலத்த நிர்பந்தத்திற்குப் பின்னரே அந்த இளைஞன் பிரியதர்சினியைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டு உள்ளார்.

இந்த இளம் பெண்ணான பிரியதர்சினி ,

நாகரீகம் என்ற போர்வையில் கண்டது காதலில் விழுந்தது,

சில நாட்கள் பழகிய உடனேயே அந்தக் காதலன்தான் தனக்கு உலகம் என்று நம்பித் தன்னை முழுமையாக அவனுக்குக் கொடுத்தது,

காதல் என்பதையும் தாண்டித் தனது உடல் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் தனது காதலனுடன் எல்லை மீறிப் பலமுறை உல்லாசத்தை அனுபவித்தது,

தான் ஒரு பெண் என்பதையும் - சமுதாயத்தில் பெண்ணிற்குரிய கட்டுப்பாடுகளைய்ம், பொறுப்புகளையும் மறந்து - தனது கற்பையே காவு கொடுத்தது,

பின்னர் தனது காதலன் தன்னைத் திருமணம் செய்ய மறுத்த போது அழுது புலம்பியது,

என்ற சம்பவங்கள் வரை பிரியதர்சினி தொடர்ந்து தவறுகளையே செய்து வந்திருந்தாலும் பின்னர் காவல்துறை மூலம் நீதியைப் பெற்றது புத்திசாலித்தனம் என்றால் அதை விட முன் யோசனையுடன்- தீர்க்க தரிசனத்துடன் - இன்னொரு முடிவையும் தைரியமாக எடுத்து உள்ளார்.

திருமணத்திற்கு முன்னரே தன் மீது இத்தனை சந்தேகம் வைத்த தனது காதலன் இப்போது காவலர்களின் மிரட்டலால் தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ள சூழலில் அவனைத் திருமணம் செய்து கொண்டால் தனது எதிர்காலம் எப்படி வளமாக இருக்கும்? என்று எண்ணி அஞ்சியுள்ளார் பிரியதர்சினி.

நிதானமாக சிந்தித்து சமயோசிதமாக செயல்பட்டு உள்ளார் அந்தப் பெண், தன்னை விரும்பியபடி எல்லாம் அனுபவித்து விட்டு, காரியம் முடிந்த உடன் கழட்டி விட்டு விடத் தீர்மானித்த - தன் மீது சந்தேகப் பட்ட - அந்த இளைஞன் இனிமேல் தனக்கு இனிமையான வாழ்வினைத் தருவான் என்று நம்புவது ஒரு முட்டாள் தனமான நம்பிக்கையாக இருக்குமே தவிர புத்திசாலித் தனமான முடிவு அல்ல என்று முடிவெடுத்து இருக்கிறார் அந்தப் பெண்.

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், காவலர்களின் மிரட்டலுக்குப் பின்னர் தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்ட அந்த இளைஞனை உதறி விட்டு விட்டு நடையைக் கட்டி உள்ளார் அந்தப் பெண்.

இவ்வளவு புத்திசாலித் தனமாகவும் , தீர்க்கமாகவும் சித்தித்து தைரியமாகச் செயல்படக் கூடிய துணிவு உள்ள பிரிய தர்சினியைப் போன்ற பெண்கள் கூட காதல் என்று வரும் போது மட்டும் இப்படி அவசரப்பட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுவதான் வேதனையாக உள்ளது.

இளம் பெண்கள் படிக்கும் போதே அவர்களுக்கு இது போன்ற சூழ்நிலைகளை எப்படி எதிர் கொள்ளுவது என்பது பற்றிய பயிற்சிகளையும் பெண்களின் மனவலிமையை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகளையும் அளிக்க வேண்டியது மிக அவசியம்........


நன்றியுடன் அதிரை‍‍‍‍‍‍‍ * அபுசுமையா ஜித்தா

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்கள் !"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?